தகவல்கள் அழிந்ததால் சங்கடம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. பலரும் அவசர அவசரமாக ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்தனர். அவ்வகையில், டிசம்பர் மாதம் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை பலர் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் தகவல்கள் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் தகவல்கள் அழிந்து போன மின் நுகர்வோரின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தேதிகளில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பை செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருவதாகவும் அந்த மின் நுகர்வோர் மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த காலகட்டத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.