அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, சமீப காலமாக சில அரசியல் கட்சிகளின் அடியாட்களிடம் இருந்து மட்டுமின்றி, மாவோயிஸ்டுகள், மத பயங்கரவாதிகளிடமிருந்தும் மிரட்டல்கள் வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருக்கு அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த ஐ.பி உளவுத்துறை தகவல்கள் மற்றும் பரிந்துரையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலைக்கு முன்பு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அண்ணாமலைக்கு இனி 33 சி.ஆர்.பி.எப் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். மேலும், அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.