புதிய நாடாளுமன்ற கட்டடம் தயார்

தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டாவுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சென்டிரல் விஸ்டா திட்டத்தில் ராஜபாதை சீரமைப்பு, மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம், அலுவலகம், துணை குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட கட்டுமானங்களும் அடங்கும். இந்த புதிய கட்டடப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது கட்டடத்தின் உள் அலங்காரப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் புதிய கட்டிடம் தயாராகிவிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “கட்டடத் திறப்பு விழா தேதி குறித்து முடிவெடுக்குமாறு மத்திய அரசிடம் கடந்த நவம்பர் மாதமே தெரிவிக்கப்பட்டுவிட்டது. இன்னும் திறப்பு விழா தேதி முடிவு செய்யப் படவில்லை’’ என கூறியுள்ளார்.