ஆளுநருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும். எனவே அந்த பதவியானது ஒரு ஆதாயம் தரக்கூடிய பதவி. அரசியல் சாசனப்படி ஆளுநராக பதவி வகிப்பவர் இதுபோன்று ஆதாயம் தரக்கூடிய பதவிகளை வகிக்கக்கூடாது. இதனால் ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பெறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என். ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதி இழக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்த விசாரணை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா, இல்லையா என்பது குறித்த தீர்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.