ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வல வழக்கு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த, பாதுகாப்பு காரணங்கள் உட்பட ஏதாவது ஒரு காரணத்தை கூறி தொடர்ந்து தடைசெய்து வருகிறது தமிழக அரசின் காவல்துறை. இதனால், தமிழகத்தில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் மேல்முறையீட்டு மனுகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் 22ம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அணிவகுப்பு ஊர்வலத்தை வரும் 29ம் தேதி நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி அளிக்க விண்ணப்பங்கள் தந்தது ஏற்புடையதல்ல என காவல்துறை மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதையடுத்து, அனைத்து போராட்டங்களுக்கும் இதே அணுகுமுறையைதான் காவல்துறை பின்பற்றுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என காவல்துறை தரப்பில் கேட்டதையடுத்து தமிழக அரசு மற்றும் காவல்துறை வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.