இது போருக்கான காலம் அல்ல

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் 6 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சைப்ரஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் ஆஸ்திரியா சென்ற அவர், வியன்னாவில் ஆஸ்திரியா வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க்கைசந்தித்து பேசினார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், “உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதலைப் பொறுத்தவரை ‘இது போருக்கான காலம் அல்ல’ என்று பிரதமர் மோடி கூறிய கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பேச்சுவார்த்தைகள் மூலம் கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைக்கு இரு நாடுகளும் திரும்புவது அவசியம். நீண்டகால மோதல்கள் எந்த நாட்டின் நலனுக்கும் உதவாது. இருநாட்டு தலைவர்களுடனும் பிரதமர் மோடி தொடர்புகொண்டு இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறார்” என தெரிவித்தார். ஆஸ்திரிய அரசு ஊடகத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்த அவர், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என பல நாடுகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்த சீர்திருத்தத்தை உடனே மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் தருவதில் பாரதம் முன்னணியில் உள்ளது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாடான பாரதம் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களில் ஒன்றாக இல்லை. ஒட்டுமொத்த ஆப்பிரிக்கவும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு வெளியில் இருக்கின்றன. வளரும் நாடுகளுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. நிரந்த உறுப்பினருக்கான பலன்களை அனுபவிக்கும் நாடுகள், பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் வேகம் காட்ட மறுக்கின்றன. இது மிகவும் குறுகிய கண்ணோட்டம் கொண்டது, சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மிக அதிக காலம் எடுத்துக் கொள்ளக்கூடாது என நான் கருதுகிறேன்” என கூறினார்.