குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுவோம்

மாண்டியா மாவட்ட பா.ஜ.க சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில், “மாண்டியா, மைசூரு மண்டலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், கட்சிகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தது போதும். இந்த முறை பா.ஜ.கவை முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதா தளமும் குடும்ப அரசியலை செய்கின்றன. ஊழல் கொள்ளையுடன் செயல்படுகின்றன. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியையும் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது டெல்லியின் ஏ.டி.எம். ஆக செயல்படும். ஜனதா தளம் (எஸ்) ஆட்சி செய்தால், அது ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக செயல்படும். இந்த 2 கட்சிகளும் ஊழல்களால் கர்நாடகத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன, மதவாத அரசியல் செய்கின்றன, குற்றம் செய்வோரை பாதுகாக்கின்றன. ஊழல், குடும்ப அரசியலில் இருந்து கர்நாடகத்தை விடுவிக்க வேண்டும். கர்நாடகத்தில் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்ய பா.ஜ.கவுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் இரட்டை என்ஜின் அரசை கொண்டு வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் கர்நாடகத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வோம்” என கூறினார்.