பேனா சின்னம் கருத்து கேட்பு

தி.மு.கவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூண் ஆகியவை மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூ. 81 கோடியை செலவழித்து அமைக்கப்படும் என தி.மு.க அரசு தெரிவித்தது. எழுதாத அந்த பேனாவை மக்கள் சென்று பார்ப்பதற்காக கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 290 மீட்டர் தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. கடலுக்குள் 42 மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்தது. பின்னர், இத்திட்ட விவரங்கள் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல்துறை, தமிழக பொதுப்பணி துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில் இந்த திட்டத்திற்கு சுற்றச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், இடர்பாடுகள் மதிப்பீட்டு அறிக்கை, பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை தயார் செய்து அனுப்பி வைக்க அறிவுறுத்தியது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்றும் கூறியது. இதன்படி கருணாநிதிக்கு கடலில் பேனா அமைப்பது தொடர்பாக வரும் ஜனவரி 31ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.