ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. சொந்த ஊர்களை விட்டு நாட்டின் வேறு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஜனவரி 16ம் தேதி தேர்தல் ஆணையம் செயல்முறை விளக்கம் அளிக்கவுள்ளது. மேலும், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் (ஆர்.வி.எம்) குறித்து ஜனவரி 31க்குள் அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை அனுப்பவும் ஆணையிட்டுள்ளது. பொதுவாக மாநிலங்களின் தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களின் போது இடம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கூட்டம் கூட்டமாக மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் சென்று திரும்பும் சூழ்நிலை உள்ளது. பலரும் இந்த காரணத்தால் வாக்களிப்பதில்லை. இதனை மாற்றும் வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தாங்கள் பணிசெய்யும் மாநிலங்களில் இருந்தபடியே, தங்களது வாக்காளர் அடையாள அட்டையை வைத்து தங்கள் பகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வாக்கு பதிவு இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சியில் ஐ.ஐ.டிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்களும் பங்கேற்றனர்.