வளர்ச்சியின்மை, ஊழலுக்கு சிவப்பு அட்டை

பிரதமர் மோடி மேகாலயாவுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள், மற்றும் ஆளுநர்கள், தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களை இணைக்கும் 6 சாலை திட்ட பணிகள், ஷில்லாங் தொழில்நுட்ப பூங்காவின் 2ம் கட்ட பணிகள், துராவில் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் கன்வென்சன் மையம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நிறைவடைந்த பல்வேறு திட்டப்பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். பின்னர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர், “கால்பந்து போட்டியின்போது வீரர்கள் யாரேனும் விளையாட்டு உணர்வுக்கு எதிராக செயல்பட்டால், அவர்களுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதேபோல, வடகிழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக வளர்ச்சியின்மை, ஊழல், அரசியல் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றுக்கு நாம் சிவப்பு அட்டை வழங்கியிருக்கிறோம். வடகிழக்கு பகுதியில் விளையாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்கான பணியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக் கழகம் மற்றும் 90 பெரிய விளையாட்டு திட்ட பணிகள் வடகிழக்கில் நடைபெற உள்ளன. கத்தாரில் உலக கோப்பை இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், ஷில்லாங்கில் கால்பந்து மைதானத்தில், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பேரணியில் நான் கலந்து கொண்டுள்ளேன். அங்கே கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. இங்கே நாம் வளர்ச்சிக்கான போட்டியில் இருக்கிறோம். அதுபோன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளை நாம் நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என நான் உறுதியளிக்கிறேன். நமது மூவர்ண கொடி உயர பறக்கும், நாம், நமது சொந்த அணிக்காக உற்சாக குரல் எழுப்புவோம். 2014க்கு முன்னதாக நாட்டில் வாரத்திற்கு 900 விமானங்கள் மட்டுமே மக்களின் பயணத்திற்கு இருக்கும். ஆனால், தற்போது வாரத்திற்கு 1,900 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிரிஷி உடான் யோஜனா திட்டத்தின் வாயிலாக விவசாய பொருட்கள் விமானத்தில் பயணித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. வடகிழக்கில் மோதல்களை தடுத்து அமைதியை உறுதி செய்யும் பணியை நாம் மேற்கொண்டுள்ளோம். அதுமட்டுமல்ல, கிராமப்புற வளர்ச்சிப் பணிகள், புதிய சாலைகள், இணைப்புகள், வேகமான இணையவசதி உள்ளிட்ட பல உள்கட்டமைப்புப் பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.