இனியாவது திருந்துங்கள்

ஐ.நா சபையில் நடைபெற்ற ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பிலான விவாதத்திற்கு தலைமை தாங்கிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘பாரதத்தை விட வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தியதில்லை’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹினா ரபானி ஹர் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “ஹினா ரபானி பேசியதை நான் பார்த்தேன். அதுகுறித்த செய்திகளையும் படித்தேன்.இந்த உலகமே பாகிஸ்தானை தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாகப் பார்க்கிறது.இந்த பயங்கரவாதம் எங்கிருந்து உருவாகிறது என்பதையும் சர்வதேச சமூகம் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளது. இரண்டரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்த நம் அனைவருக்கும் மூளை மந்தநிலை கூட சற்று ஏற்பட்டிருக்கலாம் ஆனாலும் அது பயங்கரவாதத்தை தூண்டுபவர்களை சிறிதும் மறக்கவில்லை. பயங்கரவாதத்தை துண்டுபவர்கள் அதனை மேலும் தொடரும் முன் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

2011ல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளின்டன், ‘நீங்கள் உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் விஷப் பாம்புகளை வைத்துக் கொண்டு அது உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. அந்த பாம்பு அதை அங்கே விட்டவர்களையும் சேர்த்தே கடிக்கும்.எனினும், பாகிஸ்தான் இதுபோன்ற அறிவுரைகளை ஏற்காது என்று தெரியும்’ என தனது பாகிஸ்தான் பயணத்தின் போது சொல்லியிருந்தார் என்பதை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.பாகிஸ்தான் திருந்தி ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சிக்க வேண்டும்” என்றார்.

அப்போது பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஒருவர், “பாரதம் இன்னும் எத்தனை காலம் தான் பயங்கரவாதம் பாகிஸ்தானிலும் ஆப்கனிலும் இருந்து உருவாகிறது என்று சொல்லப்போகிறது?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர் “இந்தக் கேள்வியை நீங்கள் தவறாக என்னிடம் கேட்டுள்ளீர்கள்.இதனை நீங்கள் பாகிஸ்தானிடம் தான் கேட்க வேண்டும்.அவர்கள் தான் இன்னும் எத்தனை காலம் தாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எண்ணத்தில் உள்ளார்கள் என்ற சரியான பதில் சொல்வார்கள்.சரவதேச சமூகத்தை முட்டாள் என்று நினைக்க வேண்டாம்.அது எதையும் மறக்காது.நிச்சயமாக பயஙகரவாதத்தை தூண்டும் தேசங்களை விட்டுவைக்காது.நீங்கள் யாரையும் குழப்ப முடியாது.மக்களுக்கு எல்லாம் தெரிந்துள்ளது.அதனால், இனியாவது திருந்துங்கள்.ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயலுங்கள்” என கூறினார்.