நாடு திரும்பிய மீனவர்களுக்கு வரவேற்பு

புதுக்கோட்டை, நாகை, புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களான தினேஷ் குமார், லட்சுமணன், டோமினிக் உட்பட 14 தமிழக மீனவர்கள் கடந்த மாதம் 16ம் தேதி கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் 14 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள பாரத தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகம் திரும்பிய 14 மீனவர்களையும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜ.கவின் மாநில மீனவர் அணி தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையில் பா.ஜ.க.வினர் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட 14 மீனவா்களையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.