பெண்கள் குழந்தைகளை பெறும் தொழிற்சாலை அல்ல

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் சமீபத்தில் பேசும்போது, “ஹிந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? வளமான நிலத்தில் விதைத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். ஹிந்துக்களும் முஸ்லிம்களின் பார்முலாவை பின்பற்றி தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20 அல்லது 22 வயதிலும் பெண்களுக்கு 18 முதல் 20 வயதிற்குள்ளும் திருமணம் செய்து வைக்க வேண்டும், பிறகு பாருங்கள். எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன” என்று கூறினார். ஹிந்துக்கள் மற்றும் பெண்கள் குறித்த அவரின் இழிவான பேச்சுக்கு பாரதமெங்கிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “பெண்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு குழந்தைகளை தொடர்ந்து பெற்றெடுக்க வேண்டும் என பத்ருதீன் கூறுகிறார். நீங்கள் பத்ருதீன் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாம். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெண் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால், அது அந்த பெண்ணை உடல்ரீதியாக பாதிக்கும். அது நமது சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவை திருப்திப்படுத்துவதற்காக இதுபோன்ற சில பேச்சுகளை பத்ருதீன் வெளியிடுகிறார்” என கூறினார்.