விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள்

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் பாரத வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதேபோல, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது ஜீவன்ஜோத் சிங், முகமது அலி, சுமா சித்தார்த், சுஜித் மான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதில் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தயான்சந்த் விருது வழங்கப்பட்டது.