உலகத்தர ஆன்மீக நகரம் அயோத்தி

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயில் கட்டுமான பணிகளை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் நேரில் சென்று ஆய்வு செய்தார். டெதி பஜார் பகுதிக்கும் சென்று பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிட்டார். பின்னர், அயோத்தியில் ரூ.1,057 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “500 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு, அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் வலிமையான மனஉறுதியே காரணம். 2017ம் ஆண்டுக்கு முன்பு, அயோத்தி இருளில் மூழ்கிக்கிடந்தது. ஆனால், தற்போது, எல்.இ.டி. விளக்குகளால் அயோத்தி ஒளிர்கிறது. தடையற்ற மின்சாரம் கிடைத்து வருகிறது. அயோத்தியின் மேம்பாட்டுக்காக ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த இரட்டை என்ஜின் அரசு, அயோத்தியை மாநகராட்சியாக உயர்த்தியுள்ளது. உலகத்தர வசதிகளுடன் அயோத்தியை மத, வேத, ஆன்மிக நகராக உருவாக்கவும் ஸ்ரீராமர் பிறந்த இடத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றவும் உறுதி பூண்டுள்ளோம்”என்று கூறினார்.