திமுக அரசின் இரட்டை வேடம்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எரிவாயு உருளை இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2016ல் மத்திய அரசு உத்தரவிட்டபோது அதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசை விமர்சனம் செய்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது ‘ஊருக்குதான் உபதேசம்’ என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. தி.மு.க அரசின் இரட்டை வேடத்திற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு.

சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என பல இன்னல்களுக்கு தி.மு.க அரசால் ஆளாக்கப்பட்டு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியதோடு, திடீரென்று ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும் என்று மென்பொருள் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், பெரும்பாலான மின் நுகர்வோர், அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பெரும்பாலான மின் நுகர்வோர்கள், இணையதளம் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் இந்தக் காலகட்டத்தில், இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பணி துவங்கி பத்து நாட்கள் முடிவடைவதற்குள் ஆதார் எண்ணை சேர்த்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்று தி.மு.க அரசு கூறியிருப்பது முற்றிலும் நியாயமற்ற செயல். மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை தெரிவிக்காதது மக்களிடையே பெருத்த சந்தேகத்தினை எழுப்பியுள்ளது. ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள்.

ஒருவேளை, இந்த பணி முடிந்தவுடன், ஒருவருக்கு ஒரு வீட்டிற்கு மட்டும்தான் மின்சார மானியம் வழங்கப்படும் என்று தி.மு.க அரசு அறிவிக்குமோ என்ற அச்சமும் தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஒருவேளை இதுபோன்றதொரு முடிவு எடுக்கப்பட்டால் அது, வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். இதனைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தமிழக முதல்வர், ஆதார் எண் இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கவும், ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற எவ்வித நிபந்தனைகளும் வருங்காலத்தில் விதிக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அளிக்கவும், ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.