ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற தயார்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து வடக்கு மண்டல ராணுவத் தளபதி லெப்டினென்ட் உபேந்திர திவேதி ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு என்ன உத்தரவிடுகிறதோ அதை செய்து முடிக்கும். பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்தால், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, நிலைமை மாறிவிட்டது. மக்கள் நலனுக்காக நிர்வாகம் முழுமையாக செயல்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன. பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மக்கள் முழு ஆதரவு அளிக்கிறார்கள். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 160 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளனர். அவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். எல்லையிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக உள்ளன. பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. அவர்களின் கைகளுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் இருக்க தேவையானநடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பாகிஸ்தான் பாரதத்துக்குள் கடத்தும் போதைப் பொருட்களை பல பகுதிகளில் நாங்கள் பிடித்துள்ளோம். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளாக மாறும் இளைஞர்களின் சராசரி வயது 20. எனவே, ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்கள், கல்வியில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளையும் ராணுவம் எடுத்து வருகிறது. கல்வி கற்க பல இளைஞர்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பியுள்ளோம்” என்றார்.