சிக்கலாகும் அமைச்சர் மசாஜ் விவகாரம்

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஒரு நபர் மசாஜ் செய்யும் வீடியோக்கள் வைரலானது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜெயினுக்கு சிறைக்குள் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சி அதனை திசை திருப்ப முயன்றது. சத்யேந்திர ஜெயினுக்கு முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர் அறிவுறுத்தியதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறி இதனை நியாயப்படுத்த முயன்றார். ஆனால், சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பிசியோதெரபிஸ்ட் அல்ல. அவர் அங்குள்ள சிறைக் கைதி ரிங்கு என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் ஒரு மைனர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், கிரிமினல் மிரட்டல்கள் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.