மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

தமிழக அரசு சமீபத்தில் மின்சார கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்தி பொதுமக்கள், தொழிதுறையினர் என அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில், தமிழக அரசு உயர்த்திய இரண்டு வகையான மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி, கோவையில் உள்ள 18 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய ‘போசியா’ கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 25ம் தேதி கோவையில் கதவடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. ‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முக குமார் உள்ளிட்டோர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா தொற்று பரவல், மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் தொழில் நிறுவனத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தபோதும் தமிழக அரசு மின் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. குறு, சிறு நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் எல்.டி.சி.டி பிரிவுக்கான மின் கட்டணத்தை 60 முதல் 70 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை தொடர்ந்து 25 சதவீதமாக இருந்த உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எல்.டி.சி.டி மாதாந்திர நிலைக்கட்டணம் 150 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர்ந்து உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை அரசு முழுமையாக நீக்க வேண்டும். மின் கட்டண உயர்வால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. இது ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மின் வாரியத்தை லாபகரமாக இயக்க பல வழிகள் உள்ளன. அதைவிடுத்து கட்டண உயர்வை அமல்படுத்துவது மட்டுமே தீர்வாகாது. எல்.டி.சி.டி நிலைக்கட்டணத்தை பிரிவுக்கு முன்பு இருந்ததை போலவே ரூ. 35 மட்டும் வசூலிக்க வேண்டும். இவ்விரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வரும் 25ம் தேதி சுமார் 20 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் ஒருநாள் கதவடைப்பும் டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே உண்ணாவிரதமும் இருக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தனர்.