71,000 பேருக்கு அரசுப்பணி ஆணைகள்

பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தின் இரண்டாவதுவேலை வாய்ப்பு வழங்கும் விழாவின் கீழ், புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலிகாட்சி மூலம் வழங்குகிறார். மேலும், இந்நிகழ்ச்சியில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார். இவ்விழாவில் சென்னை உட்படநாடு முழுவதும் 45 இடங்களில் (தேர்தல் நடைபெறும் குஜராத், ஹிமாச்சலப்பிரதேசம் தவிர) புதிய பணி ஆணைகள் நேரடியாக வழங்கப்படும். மேலும், புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார். பல்வேறு அரசு துறைகளில் புதிய பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு பணியாளர்களுக்கானநடத்தை விதிமுறைகள், பணியிட மரபுகள், நேர்மை, மனித வள கொள்கைகள், இதர பயன்கள் மற்றும் படிகள் ஆகியவை இந்தப் பயிற்சியில் அடங்கும். வேலை உருவாக்கத்திற்கு உயர்முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் அர்ப்பணிப்பை நிறைவேற்றும் விதமாக வேலைவாய்ப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு விழா வேலை உருவாக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மேம்பாட்டு பணியில் இளைஞர்கள் நேரடியாக பங்கு பெறவும், அவர்கள் அதிகாரம் பெறவும், ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளை இது வழங்குகிறது. இந்த விழாவின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 75,000க்கும் அதிகமான புதிய பணியாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது. இத்துடன், ஏற்கனவே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் தவிர, ஆசிரியர்கள், செவிலியர்கள், விரிவுரையாளர்கள், செவிலி அதிகாரிகள், மருத்துவர்கள், மருந்தாளர்கள், ரேடியோ கிராபர்கள், துணை மருத்துவம் மற்றும் இதர தொழில்நுட்ப பணிகளுக்கும் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட பல்வேறு மத்திய ஆயுதப் போலீஸ்படைப்பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.