அடுத்தடுத்து 3 பொருளாதார அதிர்ச்சிகள்

ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறையின் வருடாந்திர மாநாடு ஹைதராபாத்தில் நடந்தது. இதை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்து பேசுகையில், “கொரோனா பெருந்தொற்று, பெரிய தரவுகளின் சக்தியை பயன்படுத்தவும், வீட்டிலிருந்து பணிபுரியும்போது நேரடி கருத்து வழிமுறைகளை வலுப்படுத்தவும் வாய்ப்பை உருவாக்கியது. கொரோனா முதல் அலை காலத்தில் தரவுகளை திரட்டுவதும், புள்ளிவிவர இடைவெளிகளும் பெரிய சவாலாக இருந்தது. இரண்டாவது அலையின்போது, இலக்கு கொள்கை தலையீடுகளை வடிவமைப்பதற்கு, துறை அளவிலான அழுத்தம் பற்றிய தகவல்களை சேகரிப்பது முக்கியமானதாக இருந்தது. மூன்றாவது அலை இருந்தபோதும் ஏற்கனவே சரிவடைந்த பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட உக்ரைன் ரஷ்ய போர் புதிய சவால்களை கொண்டு அளித்ததது. கடினமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை உலகம் எதிர்கொண்டது. வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்களால் உந்தப்பட்ட, உலகப் பொருளாதாரத்தின் துண்டாடுதல் வடிவில் ஒரு புதிய ஆபத்து உருவானது. விண்ணை முட்டும் பொருட்களின் விலை, வினியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு போன்றவை ஏற்பட்டன. இந்த காரணிகள் உலகளாவிய பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. கொரோனா தொடர் அலைகள், போர் ஆகிய 3 மிகப்பெரிய அதிர்ச்சிகள் 2020 மார்ச் மாதத்தில் இருந்து பொருளாதார ஆராய்ச்சிக்கு மிகவும் மாறுபட்ட சவால்களை முன்வைத்தன. இந்த மூன்று அதிர்ச்சிகளின் பின்விளைவுகள் இன்னும் வெளிப்பட்டு வருகின்றன. இதனால் நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி செயல்பாடு இவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.