ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெற்றுள்ளது

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில், யுனிவர்சல் பீரியாடிக் ரிவியூ என்ற மறு ஆய்வு செயற்குழுவின் 41வது அமர்வில் பாகிஸ்தானின் காஷ்மீர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பதில் அளித்து பேசிய இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சர்வதேச மேடையில் காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பியதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடினார். மேலும், “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசம் முழுவதும் பாரதத்தின் எப்போதும் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.2019ல் செய்யப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களுக்குப் பிறகு, பிராந்திய மக்கள் இப்போது நாட்டின் பிற பகுதிகளைப் போலவே தங்கள் முழு திறனையும் உணர முடிகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடன் ஒப்பிடும்போது, ​​370வது பிரிவை ரத்து செய்த பின்னர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மக்களுக்கு பல முன்னேற்றமான மாற்றங்கள் வந்துள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ஆகஸ்ட் 2019 முதல் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் அனைவருக்கும் சிறந்த வாய்ப்புகளை அரசு உறுதி செய்துள்ளது. இதில் அடிமட்ட அளவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது, வலுவான நிர்வாகம், இணையற்ற உள்கட்டமைப்பு, சுற்றுலா, நலிந்த பிரிவினருக்கான உறுதியான நடவடிக்கை, இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை, பாரபட்சமற்ற சட்டங்கள், குடும்ப வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், திருநங்கைகளுக்கான உரிமைகள் மற்றும் வணிக வளர்ச்சி ஆகியவை அடங்கும். இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சுமார் 16 மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர்.இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகம். பாரதம் தனது மனித உரிமைகள் கடமைகளை பூர்த்தி செய்வதற்காக  வழக்கற்றுப் போன காலனித்துவ காலச் சட்டத்தை ரத்து செய்வது உட்பட சட்ட அமைப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கான சட்டங்களை இயற்றியுள்ளது. ஜனநாயக அமைப்பில் மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பங்கை பாரதம் மதிக்கும் அதே வேளையில், அவர்களின் நடவடிக்கைகள் எங்கள் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.