ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்தநாள் விழா, மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா மற்றும் பாரதத்தின் 75வது சுதந்திர தின விழா ஆகிய முப்பெரும் விழாக்களை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் கடலூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோட்டில் இருந்து மாலை 4 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அணிவகுப்பு ஊர்வலத்தை ஏமப்பேர் எம்.ஏ.ஜி.சரண் ஸ்டீல்ஸ் உரிமையாளர் எம்.ஏ.கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு ஊர்வலம் மாலை 5 மணியளவில் மந்தைவெளி திடலில் முடிவடைந்தது. அணிவகுப்பு ஊர்வலத்தில் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 310 பேர், சீருடை அணியாத ஆண்கள் 346 பேர், பெண்கள் 40 பேர் என மொத்தம் 696 பேர் கலந்து கொண்டனர். மாலை 5.30 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி ஸ்ரீசந்திரன் பில்டர்ஸ் உரிமையாளர் சி.சத்தீஸ்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீஜெயலட்சுமி ஹைடெக் மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் வி.செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். மாநில மக்கள் தொடர்பு பிரிவு செயலாளர் எஸ்.கல்யாண் சிறப்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி நகர செயலாளர் கல்கி. நாராயணன் நன்றி கூறினார். ஜில்லா சங்கசாலக் பி.எஸ்.ஆர். மகாதேவன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பாலக்கரையில் மாலை 4 மணிக்கு அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள வானொலித் திடல்வரை சுமார் 2 கி.மீ. தூரம் அணிவகுப்பு ஊர்வலம் சென்று, மாலை 5 மணியளவில் முடிவடைந்தது. அணிவகுப்பு ஊர்வலத்தில் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 225 பேர், சீருடை அணியாத ஆண்கள் 86 பேர், பெண்கள் 10 பேர் என மொத்தம் 321 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் வானொலித் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. கஞ்சமலை சித்தர் திருமரபில் வந்த பொன்னம்பல சுவாமி மடாதிபதி திருவிநாயக வேல்முருக சித்தர் ஆசியுரை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாரத் நிறுவனங்களின் உரிமையாளர் கே.என். ஜெயராமன் தலைமை வகித்தார். கோகுலம் ஜூவல்ஸ் உரிமையாளர் வி. குணசீலன் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருச்சி விபாக் சங்கசாலக் கிருஷ்ண.முத்துசாமி சிறப்புரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் திருச்சி விபாக் செயலாளர் க.செல்வம், பெரம்பலூர் பா.கார்த்திக்கேசவன், ரா.பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கடலூர்: கடலூரில் மாலை 4 மணியளவில் ஆர்ய வைஸ்ய திருமண மண்டபம் அருகில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலம், சன்னதி தெரு, தேரடித் தெரு, சுப்ராய செட்டித் தெரு, சங்கரநாயுடு தெரு, வரதராஜ நாயுடு தெரு, போடிச்செட்டித் தெரு வழியாகச் சென்று இறுதியில் சன்னதித் தெருவில் பொதுக்கூட்ட மேடை அருகில் நிறைவுற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை கே. பாரிவள்ளல் கொடியசைத்து துவக்கி வைத்தார். அணிவகுப்பு ஊர்வலத்தில் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 453 பேர், சீருடை அணியாத ஆண்கள் 278 பேர், பெண்கள் 36 பேர் என மொத்தம் 767 பேர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் டி.கதிர்வேல் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்டத் தலைவர் என்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வடதமிழகத்தின் மாநில குடும்ப ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். நிறைவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் நன்றி கூறினார்.