கிறிஸ்தவ மதமாற்ற புத்தகம்

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில், ஹிந்துக்களை மத மாற்றம் செய்யும் நோக்கில், பார்ப்பதற்கு பகவத் கீதை போன்றே தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ மத மாற்ற புத்தகங்களை ஹிந்துக்களிடம் வினியோகித்ததாக கிறிஸ்தவ மிஷனரிகள் மீது பஜ்ரங் தளத்தின் கர்நாடக பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், ‘துமகுருவில், கிறிஸ்தவ மிஷனரிகள் ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் நோக்கில் மிகப்பெரிய இயக்கத்தை மேற்கொண்டுள்ளனர். பகவத் கீதையை ஒத்த புத்தகங்களை விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகிய சம்பவங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அந்த புத்தகத்தில் ஹிந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். பாபா ஆதம் பிரம்மா, மகாதேவ், முகமது ஆகியோருக்கு சமம் என்றும், ஜைனர்களால் போற்றப்படும் ஆதிநாத் பாபா ஆதாமாக பிறந்தார் என்றும் அந்த புத்தகத்தில் திரித்து கூறப்பட்டுள்ளது. பாபா ஆதம் பிரம்மாவின் கிரகத்திலிருந்து வந்தவர் என்றும் பிரம்மாவின் மறு அவதாரம் என்றும் அது கூறுகிறது. கன்னட மொழியில் ‘கீதேயே நின்ன ஞான அம்ருதா’ என்ற புத்தகத்தின் விநியோகம், விற்பனையை கிறிஸ்தவ மிஷனரிகள் வேகமாக பரப்பி வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் இதற்காக துமகூருக்கு வந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புத்தகங்கள் டெல்லியில் உள்ள கபீர் அச்சகத்தில் அச்சடிக்கப்படுகின்றன. உள்நோக்கத்துடன் செயல்படும் இந்த கிறிஸ்தவ மதமாற்ற படைகளை தடுக்க வேண்டும்” என துமகுரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது.