மீண்டும் தேவர் பிறந்து வர வேண்டும்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60வது குருபூஜை நேற்று கொண்டாடப்பட்டது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தேவருக்கு மரியாதை செலுத்தினர். அவ்வகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முத்துராமலிங்க தேவர் ஐயா தமிழகத்தின் முக்கியமான காலகட்டத்தில் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்திருக்கிறார். தமிழகத்தில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். குறிப்பாக ஆள்கின்ற அரசியல்வாதிகள் எதுவேண்டுமானாலும் பேசலாம், எதுவேண்டுமானாலும் மறைக்கலாம், எதை வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற மிதப்பில் உள்ளனர். தமிழகத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆகவே மீண்டும் தேவர் பிறந்து வர வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர். முத்துராமலிங்க தேவரின் சித்தாந்தம், கொள்கையை பா.ஜ.கவால் மட்டுமே செயல்படுத்த முடியும்” என்று கூறினார்.