ஸ்டாலின் மௌனம் ஏன்?

கோவை நகரில் நடந்த கார் வெடிப்பு, அதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள், கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. தமிழக மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மக்களை சந்தித்து நம்பிக்கை அளிக்க வேண்டியது முதல்வரின் பொறுப்பு என்று உணர்ந்திருந்தும் ஸ்டாலின் ஒரு சிறு அறிக்கைகூட வெளியிடவில்லை. பாரதத்தில் எங்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனே பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவும் பதில் சொல்ல வேண்டும், பதவி விலக வேண்டும் என கூக்குரலிடும் தி.மு.கவினரும், கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட ஸ்டாலின் விளக்கம் அளிக்காதது குறித்து கேள்வியெழுப்பாமல் மௌனம் சாதிக்கின்றனர். இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில் குண்டு வெடிப்பு நடந்து 36 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்பொழுது வரை முதல்வர் மக்களை சந்தித்து இதைப்பற்றி பேச தயங்குவது ஏன்? இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா?” என கடுமையாக சாடியுள்ளார்.