தெலுங்கானா அரசின் மதசார்பின்மை

துணை ஆட்சியர், டி.எஸ்.பி, வணிக வரித்துறை துணை ஆட்சியர் உள்ளிட்ட ஆட்சிப் பணியிடங்களுக்காக தெலங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு சமீபத்தில் நடந்தது. நீட் தேர்வு போலவே, இத்தேர்விலும் வழக்கம்போல ஏராளமான கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால், இந்த கெடுபிடிகள் அனைத்தும் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களிடம் மட்டுமே காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஹிந்து பெண்கள் அணிந்திருந்த நகைகள் மட்டுமல்லாது, தாலியையும் கழற்றச் சொல்லி அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். ஆனால், ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண்களிடம் இத்தகைய கெடுபிடிகள் எதையும் காட்டாமல், ஹிஜாபை அகற்ற சொல்லாமல், சோதனைகள் ஏதும் செய்யாமல் பரிட்சை எழுத அப்படியே அனுப்பி வைத்தனர். வழக்கமாக, மத்திய மாநில அரசுத் தேர்வுகளுக்கு சாதாரண உடைகள் அணிந்துதான் தேர்வெழுத வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், தெலங்கானா அரசு அந்த விதிமுறையை மீறி ஹிஜாப், பர்தா, புர்காவுடன் முஸ்லிம் பெண்களை தேர்வெழுத அனுமதித்திருப்பது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.