சின்னத்திரையில் லவ் ஜிஹாத்

செவ்வந்தி என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா. மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செல்லம்மா’ தொடரில் நடிப்பவர் நடிகர் அர்ணவ். இவர்கள் ஏற்கனவே ஒரு தொடரில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் 2 வருடங்களாக சேர்ந்து வசித்து வந்தனர். இந்நிலையில் லவ் ஜிஹாத்தால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் நபரான அர்ணவ், தன்னை வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்மாக மதமாற்றம் செய்து கர்ப்பம் அடையவைத்து தற்போது வேறோரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் மகளிர் ஆணையத்தில் திவ்யா புகார் அளித்துள்ளார். மேலும், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.அர்ணவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகர் அர்ணவ் தன்னை மிரட்டுவதாக ஆடியோ ஒன்றையும் நடிகை திவ்யா வெளியிட்டார். பதிலுக்கு அர்ணவ், திவ்யா மீது புகார் தெரிவித்து வருகிறார். இந்த சூழலில், திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நடிகர் அர்ணவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.