புதிய தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் தற்போது பதவி வகித்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 8ம் தேதி பணி நிறைவு செய்கிறார். இதனிடையே, அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு யு.யு.லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு சிபாரிசு செய்வது வழக்கம். அதன் அடிப்படையில், யு.யு.லலித்திற்கு அடுத்த மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். அவர் நவம்பர் 9ம் தேதி, நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டி.ஒய்.சந்திரசூட் 2024 நவம்பர் 9ம் தேதிவரை அப்பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.