வர்ணம் ஜாதி கோட்பாடுகளை தூக்கியெறிவோம்

டாக்டர் மதன் குல்கர்னி, டாக்டர் ரேணுகா போகரே எழுதிய வஜ்ரசூசி துங்க் என்ற புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசுகையில், “சமத்துவ சமூகம் என்பது பாரத கலாச்சாரத்தின் ஒரு பகுதி. தற்போது அது மறக்கப்பட்டு பல மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளது. முன்பு வர்ணம் மற்றும் ஜாதி அமைப்புகளில் பாகுபாடு இருக்கவில்லை. அதன் பயன்பாடு மட்டுமே இருந்தது. இப்போது யாராவது ஜாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை. அவைகள் மறக்கப்படவேண்டும் என்று சொல்லுங்கள். பாகுபாடுகளை உருவாக்கும் அனைத்தும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட வேண்டும். உலகின் அனைத்து இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். பாரதமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அந்தத் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்கக்கூடாது. இப்படி தவறுகளை ஏற்றுக் கொள்வதால் நமது முன்னோர்களின் மதிப்பு குறைந்து விடும் என்று நீங்கள் கருதுகிறீர்களா, நிஜம் அது இல்லை. ஏனென்றால் உலகின் எல்லா பகுதிகளில் உள்ள முன்னோர்களும் தவறு செய்தவர்களாகவே இருக்கிறார்கள்” என்று பேசினார்.