ஹிந்து வெறுப்புக்கு இடமில்லை

ஐரோப்பாவின் மிகப்பெரிய நவராத்திரி விழாவாக அறியப்படும் லண்டன் நவராத்திரி விழாவில், பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர் உரையாற்றினார். அப்போது அவர், “பிரிட்டனில் பலர் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சமீப ஆண்டுகளாக வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு நடக்கும் பிரிவினை அரசியல் சோர்வையும் மிகுந்த வருத்தத்தையும் தருகிறது. அண்மையில் லீசெஸ்டர் மற்றும் பர்மிங்ஹாமில் நடந்த சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன. வெறுப்பை பரப்பும் முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். நம்மை பிரிக்கும் அம்சங்களைவிட இணைக்கும் அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மதங்கள், வழிபாட்டுத் தலங்கள், மத அடையாளங்கள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும். அதற்கு பிரிட்டனில் லேபர் கட்சி ஆட்சி அமைந்தால் அது மக்களை இணைக்கும். பிரிவினை அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும். இந்த விஜயதசமி விழாவில் உங்களுடன் இணைவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. உலகம் முழுவதும் ராவணனை எரிக்கும் நெருப்பு பிரிட்டன் சமூகம் எதிர்கொண்டுள்ள தீமையை அழிக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. நம் சமூகத்தில் நிலவும் வறுமை, அநீதி, வெறுப்பு, தீய பழக்கங்கள் அனைத்தையும் ஒழிக்க வேண்டிய நேரமிது” என்றார். கேர் ஸ்டார்மர், தனது கட்சியின் ஜெரமி கார்பின், பாரத வம்சாவளியினருக்கு சாதகமற்றவர் என்ற நிலையை மாற்ற முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். விழாவில், நூற்றுக்கணக்கான பிரிட்டன் வாழ் பாரத வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.