போக்குவரத்துத்துறை புதிய முயற்சி

பாரதத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பெங்களூரு. அங்கு போக்குவரத்து நெரிசலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிக்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படுவோர் முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் இதற்கு பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் புதிய தீர்வை கண்டுள்ளனர். அதன்படி, போக்குவரத்து காவல்துறையும் மணிப்பால் மருத்துவமனையும் இணைந்து மருத்துவ உதவி தேவைப்படுவோருக்காக எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக, பெங்களூரு முழுவதும் உள்ள போக்குவரத்து விளக்கு கம்பங்களில் கியூ.ஆர் கோடை ஒட்டியுள்ளனர். மருத்துவ உதவி தேவைப்படுவோர் இந்த கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் தாங்கள் இருக்கும் இடத்திலே மருத்துவ உதவிகளை எளிதில் பெற முடியும். பொதுவாக இது போன்ற அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். சிலரிடம் அவசரகால எண்கள் கூட இருக்காது. எனவே மக்கள் இந்த கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து விரைவில் மருத்துவ சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகர மக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.