ஹிந்து கோயில் அவமதிப்பு

வெனிசுலாவுக்கு அருகில் உள்ள இரட்டைத் தீவு கரீபியன் நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள கூவா மற்றும் பெனால் நகரங்களில் அமைந்துள்ள இரண்டு ஹிந்துக் கோயில்கள் கடந்த வாரம் இழிவுபடுத்தப்பட்டு, நாசப்படுத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது, ஆபிரகாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகின் எந்தப் பகுதியிலும் ஹிந்துக்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ஹிந்துக்கள் நவராத்திரி, துர்கா பூஜையை கொண்டாடும் நேரத்தில், கூவாவில் உள்ள காளி கோயிலில் உள்ள காளியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் “யாத்திராகமம் 20:3-4’ஐ படியுங்கள்” என்று பெரிய சிவப்பு எழுத்துக்களில் எழுதியுள்ளனர். இதேபோல பெனால் நகரில் விநாயகர் கோயில் ஒன்றும் அவமதிக்கப்பட்டு, சிலை உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை அறிந்த அப்பகுதி ஹிந்துக்கள் கண்ணீர் வடித்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து பேசிய கோயில் பூஜாரி, “நாம் அனைவரும் வழிபாட்டு சுதந்திரத்தை அனுபவிக்கும் டிரினிடாட் மற்றும் டொபாகோ ஒரு பல மத நாடு என்றாலும், மக்கள் அனுபவிக்கும் அமைதியான சகவாழ்வை அழிக்க சிலர் முனைந்துள்ளதாக தெரிகிறது. கிறிஸ்தவம் என்ற போர்வையில் நடக்கும் இந்த வன்முறைச் செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்” என கூறினார்.