ஹிஜாப் தீர்ப்பு ஒத்திவைப்பு

கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லாத்தின் அடிப்படையான விஷயம் அல்ல” என தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சில முஸ்லிம் மாணவிகள், அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள், “ஆடை அணிவது என்பது அடிப்படை உரிமை என்றால், ஆடை இல்லாமல் இருப்பதும் அடிப்படை உரிமைதான். சிலுவை, ருத்ராட்சம் போன்றவையும் மத அடையாளங்கள்தான். அவற்றை அணிந்து கொண்டு மாணவர்கள் வரும்போது ஹிஜாபுக்கு மட்டும் ஏன் தடை?” என்று வாதிட்டனர். இதில் குறுக்கிட்ட நீதிபதிகள், “சிலுவை, ருத்ராட்சம் போன்றவை வெளிப்படையாக தெரிவதில்லை. யாரும் அவர்களுடைய சட்டையை கழற்றி இவற்றை சோதிப்பமும் இல்லை. ஆனால் ஹிஜாப் தனித்துவமாக வெளியே தெரியக் கூடியது” என்று தெரிவித்தனர். கர்நாடகா அரசு, “குறிப்பிட்ட வகை உடை உடுத்துவதைக் கண்டு மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதே சீருடையின் நோக்கம். அதன் அடிப்படையில்தான் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதே தவிர, மதத்தின் அடிப்படையில் அல்ல. இது மதத்திற்கு அப்பாற்பட்ட பொதுவான நடவடிக்கை” என வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.