இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் இந்தியர்கள் பல உயர் பதவிகளை பெற்று உலக அளவில் புகழ் பெறுகின்றனர், உலகையே திரும்பி பார்க்க வைக்கின்றனர் என்றால் மறுபுறம் அதனால், இந்தியர்கள் மீது ஆத்திரம் கொண்டு அவர்கள் மீது சில அமெரிக்கர்கள் இனவெறித் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதேபோல மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. ஆனால், இம்முறை இது அமெரிக்காவில் அல்ல, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த தேதி குறிப்பிடப்படாத ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், “நீங்கள் ஏன் போலந்தில் இருக்கிறீர்கள்? அமெரிக்காவில், நீங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். நீங்கள் போலந்தை ஆக்கிரமிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு சொந்த நாடு உள்ளது. நீங்கள் ஏன் உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை? நீங்கள் ஏன் ஒட்டுண்ணியாக இருக்கிறீர்கள்? எங்கள் இனத்தை இனப்படுகொலை செய்கிறீர்கள். நீங்கள் ஒரு படையெடுப்பாளர்.வீட்டுக்கு போ, நீங்கள் ஐரோப்பாவில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. போலந்து நாடு போலந்து நாட்டினருக்கு மட்டுமே. நீங்கள் இந்த நாட்டவர் இல்லை” என ஒருவர் சத்தம் போடுகிறார்.