கைப்பாவை தலைவர் தேவையில்லை

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். இதனை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான், “காங்கிரஸ் காரிய கமிட்டியில் வெறும் துதிபாடுவோர்கள் மட்டுமே இருந்தால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. காங்கிரஸ் தலைவருக்கு அவர்களால் சரியான அறிவுரையை வழங்கமுடியாது. வெற்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைவிட உள்ளார்ந்து சிந்திக்க வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். வெறும் வார்த்தைப் போரால் எதனையும் சாதிக்க முடியாது. கட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஒரு கூட்டுறவு இருக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அதில் பங்கேற்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியை வெறும் 4 பேர் தான் கைக்குள் வைத்துளனர். நான் அதைப் பற்றி ஆழமாக விமர்சிக்க விரும்பவில்லை. என்னைப் போன்றோரின் கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் மீண்டும் ஒரு கைப்பாவை தலைவர் தேவையில்லை. புதிய தலைவர் உண்மையான தலைவராக இருக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும். தேர்தல் மூலம் ஒரு நாடாளுமன்ற குழுவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். காரிய கமிட்டி, தேர்தல் குழு எல்லாமே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்றார். பிருதிவிராஜ் சவான் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் கராட் தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2004 முதல் 2010 வரை பிரதமர் அலுவலக இணை அமைச்சராக இருந்துள்ளார். 2010 முதல் 2014 வரை மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்துள்ளார்.