கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளகனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாவும் நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும் சில பிரிவினைவாத அமைப்புகள் வன்முறையை தூண்டிவிட்டன. இதில், மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் கலந்துகொண்டு பள்ளியில் வன்முறை போராட்டம் நடத்தினர். பள்ளி பேருந்து உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களை சூறையாடினர். கல்வீச்சு தாக்குதல், பசு மாடுகளின் மடியை அறுத்தல் என அனைத்துவகை வன்முறையையும் அரங்கேற்றினர். இதில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அவ்வகையில், தற்போது பள்ளியில் திட்டமிட்ட ரீதியில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக, வாட்ஸ் அப் குழு மூலம் வன்முறையைத் தூண்டியதாக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்மூலம், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.