திருடப்பட்ட கோயில் சிலை அமெரிக்காவில்

தி.மு.க தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த 1971ல், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த தண்டந்தோட்டம் கிராமத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இருந்த சோழர் காலத்தை சேர்ந்த நடன சம்பந்தர், கிருஷ்ண காளிங்க நர்த்தனம், ஐயனார், அகஸ்தியர், பார்வதி தேவி சிலைகளை சில மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில், கலாச்சார பொக்கிஷங்களின் களஞ்சியமான புதுச்சேரியில் உள்ள ‘இந்தோ – பிரெஞ்சு’ கல்வி நிறுவனத்தில், கொள்ளைபோன சுவாமி சிலைகளின் புகைப்படங்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். அவற்றை ஒப்பிட்டு காணாமல்போன சிலைகள் குறித்து விசாரணை நடத்தியதில், திருடுபோன பார்வதி சிலை, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பழங்கால கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. அதே நிறுவனத்தில் தண்டந்தோட்டம் கோயிலில் காணாமல்போன நடன சம்பந்தர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வரும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பார்வதி தேவி சிலையின் மதிப்பு ரூ.1.60 கோடி என்றும் 13ம் நூற்றாண்டை சேர்ந்த நடன சம்பந்தர் சிலையின் மதிப்பு ரூ.1.92 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.