இஸ்ரோ சோதனை வெற்றி

இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. ககன்யான் விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது இத்திட்டத்தின் நோக்கம். இந்த விண்கலம் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, குறைந்த உயரத்தில் தப்பிக்கும் மோட்டார் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது. வீரர்கள் குழு தப்பிக்கும் அமைப்பு சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த சோதனை முயற்சி ககன்யான் திட்டத்தில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. குறைந்த உயர தப்பிக்கும் மோட்டார் எனப்படும் லோ ஆல்டிட்யூட் எஸ்கேப் மோட்டாரின் மூலம் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் முயற்சி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் நிகழ்த்தப்பட்டது. ஆபத்தான சூழலில், விண்வெளி வீரர்கள் குழு தப்பிக்க இந்த முயற்சி வழிசெய்யும். ராக்கெட்டில் குழுவினர் பயணிக்கும் போது எதிர்பாராதவிதமாக முதற்கட்டத்திலேயே ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு பயணம் தோல்வியடைந்தால், குறைந்த உயர தப்பிக்கும் அமைப்பால் வீரர்கள் குழு பத்திரமாக பூமிக்கு திரும்ப உந்துசக்தி ஆற்றல் அளிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.