ரக்ஷாபந்தன்

நண்பர்கள் தினம், அன்னையர் தினம், காதலர் தினம்… இதெல்லாமே மேற்கத்திய நாட்டின் கலாச்சாரங்கள். நமக்கே சொந்தமாக, எந்த நாட்டிலுமே இல்லாத அண்ணன் தங்கைக்கு இடையேயான சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ஒரே தினம் ரக்ஷாபந்தன் திருநாளாகும். ஒரு சகோதரி தனது சகோதரனின் கையில் ராக்கியை அணிவித்து, நெற்றியில் குங்குமத் திலகமிட்டு இனிப்புகளை வழங்குவாள். சகோதரன் தனது பங்காக பரிசாகவோ, பணமாகவோ அளிப்பதுண்டு. சொந்த சகோதரன் இல்லாவிட்டால் கூட தெரிந்த வீட்டுப் பிள்ளைகளைச் சகோதரர்களாகப் பாவித்து ரக்ஷை கட்டுவது நமது பாரம்பரிய பண்பாடு. ரக்ஷை அணிவிப்பது தன் சகோதரன் தன்னை என்றென்றும் காக்க உறுதி பூணும் கங்கணமாக இருக்க வேண்டும் என்று சகோதரிகள் வேண்டிக் கொள்வார்கள்.

சில புராண, இதிகாச, சரித்திர சான்றுகள்: ஒருமுறை, அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் நடந்து தேவேந்திரனிடமிருந்து இந்திர லோகத்தைப் பறித்துக்கொண்டு அவனைக் துரத்தி விடுகிறார்கள் அசுரர்கள். தோல்வியடைந்த இந்திரன், தனது குருவிடம் இதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று கேட்கிறான். அவரது குரு படையெடுத்துச் செல்ல நல்ல முகூர்த்தமான ஆவணி மாத பௌர்ணமி (ரக்ஷாபந்தன் நாள்) நாளைக் குறித்துக் கொடுத்து அவனது வலது கரத்தில் ரக்ஷை அணிவித்து வெற்றிபெற வாழ்த்தி அனுப்புகின்றார். அதன் பின்னர் நடந்த போரில் இந்திரன் வெற்றி பெற்று, தேவலோகத்தை மீண்டும் பெறுகிறான்.

ஒருமுறை யுதிஷ்டிரர் கண்ணபிரானிடம் தன்னைத் தாக்கவரும் தீய சக்திகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறார். கண்ணபிரான் அவரிடத்தில் ‘ரக்ஷாபந்தன்’ விரதத்தை அனுஷ்டிக்கக் கூறுகிறார். அதேபோல, ஒருமுறை, ஒரு போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட காயத்தில் வடிந்த ரத்தத்தைத் தடுப்பதற்காக திரௌபதி, தனது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினாள். பகவான், திரௌபதியைத் தனது சகோதரியாகவும் அந்த துணியை திரௌபதி தனக்குக் கட்டிய ரக்ஷாபந்தனாகவும் ஏற்றுக் கொண்டார். அதனால், கௌரவர்கள்; சபையில் திரௌபதியை அவமானப்படுத்திய நேரத்தில் திரௌபதியின் மானத்தைக் காத்தார்.

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது படையெடுத்து வந்தபோது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பி, தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதாகச் சரித்திரச் சான்றுகள் உள்ளன. மிலேச்சர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்த காலங்களில் அவர்களிடமிருந்து தங்கள் மானத்தைக் காத்துக்கொள்ள, ஹிந்துப் பெண்கள் ஆடவர்கள் கைகளில் இந்த ராக்கியைக் கட்டி தங்கள் கற்பைக் காப்பாற்றித் தர உத்தரவாதம் பெறும் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வந்தது.

அலெக்ஸாண்டர் நமது நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது ஜீலம் நதிக்கரையில் நமது மன்னன் புருஷோத்தமன் எதிர்த்துப் போரிட்டான். பேராற்றலைக் கேள்விப்பட்ட அலெக்ஸாண்டரின் மனைவி, தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி ஹிந்து மரபுப்படி புருஷோத்தமனுக்கு ராக்கி அனுப்பி வைத்தாள். போர்க்களத்தில் அலெக்ஸாண்டரைக் கொல்ல, உருவிய வாளை உயரத் தூக்கியபோது தனது கையில் இருந்த ராக்கியைப் பார்த்து, அலெக்ஸாண்டரைக் கொல்லாமல் விட்டு விடுகிறான் என்று வரலாற்றில் ஒரு உதாரணம் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸில் ரக்ஷாபந்தன் விழா: ஆர்.எஸ்.எஸ். ஆண்டுதோறும் நடத்தி வருகின்ற 6 விழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ஆர்.எஸ்.எஸ் ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் அமைப்பு. ஹிந்துக்கள் ஜாதி, மொழி, மாநிலம், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு குடும்பமாக வாழவேண்டும் என்ற உணர்வை உருவாக்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தீண்டாமையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆர்எஸ்எஸ்ஸின் கிளைகளில் ரக்ஷாபந்தன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தங்களுக்குள் ரக்ஷையைக் கட்டுவதன் மூலம் தாங்கள் அனைவரும் ஒன்றே என்ற உணர்வைப் பெற்று வருகிறார்கள். ரக்ஷை என்றால் காப்பு என்று பொருளாகும். இந்த நாளில், இந்த ராக்கியைக் கைகளில் கட்டிக் கொண்டு பாரதம் காப்போம்” என்ற சங்கல்பத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.

ஹிந்து அனைவரும் சோதரர்கள்; ஹிந்து எவருமே தாழ்ந்தவராகார் ஹிந்துவை காப்பது என் விரதம்; சரிசமானமே எனது மந்திரம்