கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பாராட்டிய மீராபாய் சானு

பாரதத்தின் மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்தவர் மீராபாய் சானு. பளு தூக்கும் வீராங்கனையான இவர், 2020ல் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது, இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 49 கிலோ எடைபிரிவில் மீராபாய் சானு 201 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார், பாரதத்துக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அவருக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில், இவருடைய ஒரு ரசிகர், மீரா பாய் சானுவின் வலிமையை புகழ்பெற்ற ஹாலிவுட் பட ஹீரோவான தோரின் வலிமையுடன் ஒப்பிட்டு, “தோர் தனது சுத்தியலை கைவிட வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று குறிப்பிட்டு, தோர் பட கதாநாயகன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்’தை டேக் செய்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஆம், அதற்கு தகுதியானவர்தான் மீரா பாய் சானு. அவருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்தார்.