தமிழக அரசு அடுத்தமுறை இதை செய்யாது

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில், பிரதமர் படம் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று, உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காக குடியரசுத் தலைவர், மற்றும் பிரதமர் புகைப்படம் இடம் பெறவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி பட விளம்பரம் சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையை பெற்றுத்தர வேண்டும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “நாங்கள் மிகவும் ஒழுக்கமான கட்சி என்பதால், போஸ்டர் ஒட்டுமாறு எங்கள் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை நாங்கள் அறிவுறுத்துவதில்லை. அதே சமயம் சில தலைவர்கள், இந்த செஸ் விளையாட்டுப் போட்டியில் மத்திய அரசின் பங்களிப்பை வெளிப்படுத்தும் விதமாக, தங்களின் நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாரதத்திற்கு கொண்டு வருவதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது. நீதிமன்றம், மிகத் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. அடுத்த முறை தமிழக அரசு இதில் தலையிட்டு இதுபோன்ற விஷயங்களை அரசியலாக்காது என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.