பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

பாரதத்தின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் நிறைவையொட்டி, தமிழகத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை போட்டியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்த கவர்னர் ஆர்.என் ரவி விருப்பம் தெரிவித்துள்ளார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பள்ளி அளவிலும், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிப்பவர்களும் இந்த கட்டுரை போட்டிகளில் பங்கேற்கலாம். பள்ளி மாணவ மாணவிகள், ‘நான் விரும்பும் சுதந்திரப்போராட்ட வீரர்’ என்ற தலைப்பில் 10 பக்கங்களுக்கு மிகாமல் ஒரு தாளில் 20 வரிகளுடன் கட்டுரையை எழுத வேண்டும். ‘2047ல் இந்தியா’ என்ற தலைப்பில் கல்லூரி, பல்கலைக் கழக மாணவ மாணவிகள் கட்டுரை எழுத வேண்டும். இந்த கட்டுரைகள் அனைத்தும் வருகிற ஆகஸ்டு 1ம் தேதி மாலை 6 மணிக்குள்ளாக அனுப்ப வேண்டும். கட்டுரையுடன் தங்களது பெயர், வீட்டு முகவரி, வகுப்பு அல்லது பாடப்பிரிவு போன்ற விவரங்களையும் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 வெற்றியாளர்களை நடுவர் குழுவினர் தேர்வு செய்வார்கள். கல்லூரி அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ மாணவிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ. 75 ஆயிரம் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்க பரிசுகள் அளிக்கப்படும். பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில், முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 25 ஆயிரம் அளிக்கப்படும். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரிகள்: தமிழ் கட்டுரைகள்: இயக்குனர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை-100 என்ற முகவரிக்கும், ஆங்கில கட்டுரைகள்: துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், 69, அண்ணாசாலை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.