பாரதம் விரைவில் வல்லரசாகும்

காஞ்சிபுரம் கா.மு. சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், தியாகம் போற்றுவோம் அமைப்பு சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திரதின அமுதப் பெருவிழாவில் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், ‘பாரதத்தின் வளர்ச்சியும், வல்லரசாக கூடிய தன்மையும் அதிகமாகியுள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் நம் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறும்.  ‘சந்திரயான் 3’ செயற்கைகோள், இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது. அதேபோல சூரியனுக்கு ‘ஆதித்யா’ என்ற செயற்கைகோள், இஸ்ரோவில் இருந்து இரண்டு ஆண்டுகளில் விடப்பட உள்ளது. குறிப்பிட்ட துாரத்தில் இருந்து இந்த செயற்கைகோள் சூரியனை ஆய்வு செய்யும். நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லுாரி மாணவர்களால் 75 செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. அரசு பள்ளியில் தமிழில் படித்தவர்களுக்கு ராக்கெட் அறிவியல் பாடத்தை கற்று தருகிறோம். இதில் 500 பேர் பங்கேற்றனர். 110 பேரை தேர்வு செய்து ஹரிகோட்டாவுக்கு அழைத்து சென்று செயற்கைகோள் ஏவும்விதம் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தோம். அதில் 25 மாணவர்களை தேர்வு செய்து ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்ல உள்ளோம்’ என கூறினார்.