அக்னிபத் பயிற்சி முகாம்

ராணுவ அமைச்சகம் அறிவித்த அக்னிபத் திட்டத்தில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் அளிப்போம் என மதுரை பா.ஜ.க’வினர் அறிவித்திருந்தனர். அதனை உறுதிபடுத்தும் விதமாக மதுரை பா.ஜ.கவினர் இரண்டு நாள் பயிற்சி முகாமையும் நடத்தியுள்ளனர். மதுரை பொன்மேனிப் பகுதியில் இந்த பயிற்சி முகாமை மாநகர மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். பெருமாள் கதலி நரசிங்க பெருமாள் அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு விளக்கினார். மாநில பேரிடர் மீட்புக் குழு உறுப்பினர் ராஜ்குமார், தேசிய அதலெட்டிக் பயிற்சியாளர்கள் அனு அப்சரா, ராஜேஷ் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு உடல் தகுதி பயிற்சி அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர், பா.ஜ.க’வினர் அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்திருந்தனர். இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதுடன் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பா.ஜ.க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.