வொர்க் பிரம் ஹோம் சட்டம்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னர் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை குறித்து நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் முறை அமல்படுத்தப்பட்டது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, தற்போது நிரந்தரமாக சட்டமாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகம் செல்வதற்காக காலை போக்குவரத்து நெருக்கடியில் சென்று, மிகுந்த அயர்ச்சியுடன் வேலையைத் தொடங்கும் ஊழியர்கள், அதன்பின் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு போக்குவரத்து நெருக்கடியில் வருவதற்குள் பெரும்பாடு ஆகிவிடுகிறது. எனவே வொர்க் ப்ரம் ஹோம் நடைமுறையை பல ஊழியர்கள் இதனை விரும்பினர். வொர்க் ப்ரம் ஹோம் நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மீண்டும் அலுவலகத்திற்கு வரச் சொன்னபோது பல ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்தனர். ஊழியர்கள் மட்டுமின்றி பல நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறையை விரும்புகின்றன. வாடகை, மின்சாரம், இணையம், போக்குவரத்து, கேண்டீன், பராமரிப்பு உள்ளிட்ட பல செலவுகள் வொர்க் ப்ரம் ஹோம் நடைமுறையில் கிடையாது. இதனால், அதிக பணம் மிச்சம் ஆவதால் நிறுவனங்கள் இதை விரும்புகின்றன. இந்நிலையில் இப்படி இருதரப்பினரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்  நடைமுறையை விரும்புவதால், வொர்க் ப்ரம் ஹோம் நடைமுறையை தொழிலாளர் நல சட்ட உரிமையாக மாற்றுவதற்கு நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் சட்டமசோதா தாக்கல் செய்ய இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரும் ஜூலை மாதம் நெதர்லாந்து நாடாளுமன்றம் கூடும் போது இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. நெதர்லாந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது.