பா.ஜ.கவினருக்கு ஆலோசனை

தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் பழனியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் பொறுப்பாளர் முரளீதர ராவ், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், பேசிய சந்தோஷ், “தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. மத்திய அரசு எட்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அந்த திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றுள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை பா.ஜ.கவினர், வீடுகள் தோறும் எடுத்துச் செல்லவேண்டும். தி.மு.க அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் அனைத்து துறைகளிலும் ஊழல்களை செய்துள்ளது. அந்த ஊழல்களை அண்ணாமலை மக்களுக்குத் தெரிவித்து வருகிறார். அவர் மட்டுமில்லாமல் அனைத்து தொண்டர்களும் தி.மு.கவின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்னைகளை மையப்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தமிழக மக்கள் பா.ஜ.கவுக்கு ஓட்டளிக்க ஆர்வமாக உள்ளனர். நாம் அனைவரும் இணைந்து முழு நேரமாக கட்சிப் பணியாற்றினால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பா.ஜ.க உறுதியாக வெற்றி பெறும்” என்று கூறினார். முரளீதர ராவ் பேசகையில், “தமிழகத்தில் புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் பலர், முக்கியப் பொறுப்புக்கு வந்துள்ளனர். அவர்கள் கட்சியின் அடிப்படை கொள்கையான, ‘ஏகாத்ம மானவாதம்’ என்ற ஒருங்கிணைந்த மானுடக் கோட்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம், பா.ஜ.கவின் வரலாறு, சுதந்திரப் போராட்டம், தேசப் பிரிவினை, அவசர நிலை போன்ற வரலாறுகளை அவசியம் படிக்க வேண்டும்” என கூறினார்.