ஐ.எஸ் அமைப்புக்கு பெண்கள் விற்பனை

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒன்று அதிக சம்பள ஆசைகாட்டி பெண்களை முஸ்லிம் நாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. டெய்லரிங், நர்சிங் உள்ளிட்ட வேலைகளுக்கு என அழைத்துச் சென்று அவர்களை வீட்டு வேலை செய்ய அடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். மேலும், இது போன்ற சுமார் நூறு பெண்களை சிரியா கொண்டுசென்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு பாலியல் அடிமைகளாக விற்பனை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கேரள காவல்துறையும் விசாரணையை துவக்கியுள்ளது. இந்த விசாரணையில் கண்ணூரைச் சேர்ந்த மஜீத், பத்தணம்திட்டாவைச் சேர்ந்த அஜுமோன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது. மஜீத் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிலையில், அஜுமோன் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கிடைக்காததால் தெற்கு எர்ணாகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, வெளிநாட்டிலிருந்து உயிர்தப்பி வந்த கொச்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள், குழந்தைகளைப் பராமரிக்கும் பணிக்கு மாதம் 60,000 சம்பளம், விமான டிக்கெட் இலவசம் என ஏமாற்றி இளம் பெண்களை குறிவைத்து வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். புகார் அளித்த இளம் பெண்ணை முதலில் துபாய்க்கும் அங்கிருந்து குவைத்துக்கு அழைத்துச் சென்றனர். குவைத்தில் மாமா என அழைக்கப்படும் பெண் ஒருவர் இந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அவரை குவைத்தில் கொண்டு சேர்த்ததற்காக மஜீத்துக்கு மூன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டதாக அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். மேலும் கொல்லத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும், திருக்காக்கரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் இவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் சிரியாவிலிருந்து தப்பித்து வந்த இளம் பெண்ணிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது. முதல் குற்றவாளியான மஜீத்தை கைதுசெய்தால் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.