மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி

டெல்லியின் விக்யான் பவனில் நடைபெற்ற நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ‘ஐகானிக் வாரம்’ கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், பார்வை மாற்று திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக, பாரத விடுதலையின் 75வது ஆண்டு விழா முத்திரையுடன் புதிய ரூ 1, ரூ 2, ரூ 5, ரூ 10 மற்றும் ரூ 20 நாணயங்களை வெளியிட்டார். அப்போது உரையாற்றிய மோடி, “கடந்த 8 ஆண்டுகளில் பாரதம் ஒவ்வொரு நாளும் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, புதிய பணிகளைச் செய்து வருகிறது. அத்தகைய முயற்சிகளால் பொதுமக்களின் பங்களிப்பு, ஏழைகளுக்கு அதிகாரமளித்தல், வளர்ச்சியை துரிதப்படுத்துவது போன்றவை அதிகரித்துள்ளது. “ஸ்வச் பாரத் அபியான்” ஏழைகளுக்கு கண்ணியமான வாழ்க்கை வாழ வாய்ப்பளித்ததுள்ளது. முந்தைய அரசை மையமாகக் கொண்ட ஆட்சியால் தேசம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நாட்டில் கொள்கைகள் மற்றும் முடிவுகள் அரசாங்கத்தை மையமாகக் கொண்டு இருந்தது. ஒரு திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பலன்களைப் பெறுவதற்கு அரசாங்கத்தை அடைய வேண்டியது மக்களின் பொறுப்பாக இருந்தது. இன்று, 21ம் நூற்றாண்டில் பாரதம் மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியில் முன்னேறியுள்ளது. அவர்களுக்கு சேவை செய்ய எங்களை இங்கு அனுப்பியவர்கள் மக்கள். அதனால்தான் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாக கொண்டுள்ளோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலவச ரேஷன் திட்டம், 80 கோடிக்கும் அதிகமான மக்களை பசியின் பயத்தில் இருந்து விடுவித்தது. இளைஞர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்தை எளிதில் திறக்கலாம். எளிதாக உருவாக்கலாம். எளிதாக நடத்தலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நாடு செய்துள்ள சீர் திருத்தங்களில் இளைஞர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தவும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலியின் முக்கிய அங்கமாக பாரதத்தின் வங்கிகள் மற்றும் நாணயங்களை மாற்ற வேண்டியது அவசியம்” என்று பேசினார்.