பிரதமர் மாதிரி பள்ளிகள்

மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் நடந்தது. இந்த இரண்டு நாள் மாநாட்டில், பல மாநில கல்வி அமைச்சர்கள், மத்திய மாநில கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசு இந்த மாநாட்டை புறக்கணித்தது. இம்மாநாட்டின் நிறைவு நாளன்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் கல்வி கற்கும் திறமையை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 21ம் நுாற்றாண்டில் நம் மாணவர்களை சர்வதேச அளவில் தயார்படுத்துவதே இக்கொள்கையின் நோக்கம். அடுத்த 25 ஆண்டுகளில், அறிவுசார் பொருளாதார நாடாக பாரதத்தை நாம் உருவாக்க வேண்டும். உலக நாடுகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் நம்முடைய அறிவுசார் சக்தியை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு, நாம் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நம் மாநிலங்களின் சிறந்த அனுபவங்கள், வெற்றிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். நாடு முழுதும் ஒரே சீரான கல்வி வளர்ச்சியை ஏற்படுத்திட புதிய கல்விக் கொள்கை உதவும். நம்முடைய மாணவர்களை உலக குடிமகனாக மாற்ற வேண்டும். அதற்கு நல்ல கல்வி வழங்கப்பட வேண்டும். தற்போது, கர்நாடகா, ஒடிசா, மேகாலயா, உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பீஹார் என பல மாநிலங்களில் நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவற்றை அனைவரும் உள்வாங்கி, ஒருங்கிணைத்து, தேசிய அளவிலான கல்விக் கொள்கையை, பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு தரமான கல்வி எளிமையாகவும், சுலபமாகவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தேசிய அளவில், ‘பி.எம்., ஸ்ரீ பள்ளிகள்’ துவக்கப்படும். இவை, எதிர்காலத்துக்கான குடிமகனாக, நம் மாணவர்களை உருவாக்கும். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்துவதற்கான ஒரு பரிசோதனை அமைப்பாக இருக்கும். அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான். ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உள்ளது. எனவே, எந்த மொழியும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை விட தாழ்ந்ததல்ல. அதனால் தான் தேசிய கல்வி கொள்கையில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது’ என்று பேசினார்.